குழந்தைகளின் குண்டியை குறிவைத்த விளையாட்டாசிரியர்... வலியில் துடித்த பெற்றவர்கள்

Posted by Unknown - -


  பள்ளியில் இருந்த ஆவணங்கள் மர்மமான முறையில் கிழிந்தன. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி விளையாட்டு ஆசிரியர், நான்காம் வகுப்பு மாணவர்கள் 24 பேரை வரிசையாக நிற்க வைத்து, இரு கைகளையும் மேல் நோக்கி தூக்கச் செய்து, "பின்புறத்தில்' பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், குழந்தைகளின் பெற்றோர், பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர்.


மேட்டுப்பாளையம் - காரமடை ரோடு, காந்திநகரில், "பிருந்தாவன் வித்யாலயா' என்ற சி.பி.எஸ்.இ., பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் 300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் இருந்த, "ரெக்கார்டு' மர்மமான முறையில் கிழிந்திருந்தது. இதை, நான்காம் வகுப்பு மாணவ, மாணவியரில் ஒருவர்தான் கிழித்திருக்க வேண்டும் என்று, ஆசிரியைகள் சந்தேகமடைந்தனர். விளையாட்டு ஆசிரியர் சதீஷ்குமாரை அழைத்து, குழந்தைகளை விசாரிக்குமாறு கூறியுள்ளனர். இவர், வகுப்பு அறையில் வைத்து குழந்தைகளை விசாரித்துள்ளார். "தாங்கள் யாரும் ரெக்கார்டை கிழிக்கவில்லை' என்று கூறி குழந்தைகள் அழுதன. ஆத்திரமடைந்த ஆசிரியர் சதீஷ்குமார் 17 மாணவர்கள், 7 மாணவியரை விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்று வெயிலில் நிற்க வைத்துள்ளார். இரு கைகளையும் மேல்நோக்கி தூக்கி நிற்குமாறு கூறி, குழந்தைகளின் "பின்பகுதி'யில் பிரம்பு, பி.வி.சி., பைப் கொண்டு ஆத்திரம் தீர வெளுத்துள்ளார். போலீஸ் பாணியில் குற்றவாளிகளை விளாசுவது போல் தாக்கியுள்ளார். குழந்தைகள் துடிதுடித்து கதறி அழுதுள்ளனர். பின்பகுதியில் உள்காயம், ரத்தக்கட்டு ஏற்பட்டு நடக்கக்கூட முடியாதவகையில் குழந்தைகள் தவித்துள்ளனர்.


மாலையில் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர், "நடந்த சம்பவத்தை' கேள்விப்பட்டு பதறினர். அடிதாங்க முடியாமல் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கு வந்து, கொடூர ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட நான்காம் வகுப்பு மாணவர்கள் கூறுகையில், "பி.டி., மாஸ்டர் அடித்ததால் வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே வகுப்புக்கு சென்றோம்; அங்கு இருக்கையில் அமர முடியாமல் நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த பள்ளி முதல்வர் அன்புலட்சுமி, "உட்காருகிறீர்களா, இல்லை... மீண்டும் பி.டி.,மாஸ்டரை கூப்பிடட்டுமா?' என, மிரட்டினார். வலிதாங்க முடியாத நிலையிலும் இருக்கையில் அமர்ந்தோம்' என்றனர்.


பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில்,"நான்காம் வகுப்பு பயிலும் குழந்தைகளை ஈவு, இரக்கம் கொஞ்சமும் இல்லாமல் பள்ளி ஆசிரியர் அடித்திருக்கிறார். வீட்டுக்குச் சென்ற குழந்தைகளில் சிலர் இதை பெற்றோரிடம் கூட சொல்லவில்லை. சீருடையை கழற்றும்போது "பின்புறம்' ஏற்பட்டிருந்த ரத்தக்கட்டை பார்த்த பிறகே விஷயம் தெரிந்து அதிர்ச்சியடைந்தோம். குழந்தைகளை கம்பாலும், பிளாஸ்டிக் பைப்பாலும் தாக்கிய ஆசிரியர், அவ்வாறு செய்ய உத்தரவிட்ட முதல்வர் உள்ளிட்ட அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.


இதுகுறித்து பள்ளி நிர்வாகிகளில் ஒருவரான வக்கீல் சம்பத்குமார் கூறுகையில், ""விளையாட்டு ஆசிரியர் இப்படி அடித்த விவரம் எங்களுக்கு தெரியாது. குழந்தைகளை நேரில் பார்த்த பிறகு உடனடியாக அந்த ஆசிரியரை, "டிஸ்மிஸ்' செய்து விட்டோம். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க, முதல்வர் அன்புலட்சுமி மூலமாக போலீசில் புகார் செய்ய உள்ளோம்,'' என்றார்.

 நன்றி : தினமலர் 10.12.10

Leave a Reply