50 சதவீத கவுன்சிலிங் விரைவில் முடிய உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்துவிடும் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. இதுவரை நடந்த கவுன்சிலிங்கில், 12ம் தேதி வரை, 11 ஆயிரத்து 10 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதில், ஓ.சி.,- 5,397 பி.சி., முஸ்லிம்- 277, பி.சி.,- 3,354, எம்.பி.சி.,-1,657, எஸ்.சி., அருந்ததியர்-22, எஸ்.சி.,- 271, எஸ்.டி.,-2, முற்பட்ட வகுப்பினர்-30 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மற்ற பிரிவினரை விட, எஸ்.சி.,-எஸ்.சி., அருந்ததியர் மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்கள் மிகக் குறைந்த அளவில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை, 2 சதவீத மாணவர்கள் கூட சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொறியியல் படிக்க, இந்த பிரிவு மாணவர்கள் ஆர்வமாக உள்ளபோதும், வறுமை மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது. அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்தால் கூட, அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கட்டணத்தைக் கூட கட்ட முடியாத நிலையில், இந்த பிரிவு மாணவர்கள் உள்ளனர். இதனால், இந்த பிரிவு மாணவர்களின் பொறியியல் கனவு, கானல் நீராகவே உள்ளது.
முதல்வர் மனது வைத்தால்... : கடந்த, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை, 6 கோடியே, 24 லட்சத்து, 5,679ஆக உள்ளது. இதில், எஸ்.சி., சமுதாயத்தின் மக்கள் தொகை, 19 சதவீதமாகவும் (1,18,57,079), எஸ்.டி., சமுதாய மக்கள் தொகை, 1.04 சதவீதமாகவும் (8,73,679) உள்ளது.
இந்த சமுதாய மக்கள், சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு, தமிழக அரசு காலம், காலமாக பல்வேறு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. எனினும், இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டாதவர்களாகவே உள்ளனர். பள்ளிக் கல்வியை முடித்து, உயர்கல்வி படிக்கட்டில் காலடி எடுத்து வைக்கும் சொற்ப மாணவர்களும், வறுமையின் காரணமாக கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவு மாணவர்களின் பொறியியல் கனவு நனவாவதற்கு, முதல்வர் ஜெயலலிதா மனது வைத்தால் நடக்கும் என்று, இந்த சமுதாய மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.