Showing posts with label Training. Show all posts


பெற்றால்தான் பிள்ளையா? என்கிற கேள்வி வழக்கமாக சமூகத்தில் நிலவும் கேள்விகளோடு தொடர்புள்ள மற்றொரு கேள்வி “ பெற்றால் மட்டும் அன்னையா? அல்லது பெற்றோரா?”


    நல்லதொரு மாணவர் சமூகத்தை, இன்னும் சில பத்தாண்டுகளில் சமூகத்தை தாங்கி பிடிக்க போகிற, வழிநடத்த போகிற மாணவர்களின் பெற்றோர்களாக நாம் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோமா? கதைகள் கேட்டு பழகிய நம் முந்தைய குழந்தைச் சமூகம், அதாவது இன்றைய பெற்றோர் சமூகம், இன்று தொலைக்காட்சி நெடுந்தொடர், குறுந்தொடர்களின் இறைச்சல்களுக்கு நடுவே தம் பொன்னான நேரத்தை குழந்தைகளிடம் செலவிடாமல் தொலைக்காட்சி பெட்டிகளோடு செலவிடுகிறது. தொடர்ச்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரை நாம் சந்தித்த பொழுது மேலே சொன்ன குற்றச்சாட்டுகள் மேலோட்டமானவை அல்ல என்பதை மாணவர்களின் உரையாடல்களும் உறுதி செய்தது. தாய், தந்தையரிடமும் பொறுப்புள்ள, திறன்படைத்த இளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு குறித்து பேச ஆவலமாய் இருந்தோம். அதற்கு ஏற்றார் போல்  ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட மகளிர் சுய-உதவி குழுவை சார்ந்த பெண்களோடு உரையாடும் வாய்ப்பும் நமக்கு கிட்டியது.

நிகழ்ச்சியை நகராட்சியின் ஆணையர் சசிகலா அவர்கள் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வெளிச்சம் மாணவர்கள் உறவுகள் அறுந்துபோன வீட்டுச் சூழலை மெய்யாகவே குறும் நாடகத்தில் கண்முன் நிறுத்திக் காட்டினர். குழந்தைகளின் மனநிலையை கருத்தில் கொள்ளாமல் குழாயடியில் கொச்சையான சொற்களில் சண்டைப் போடும் பெண்கள், பிள்ளைகளை கவனியாமல் தொடர்களுக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் பெண்கள், சுற்றத்தார்களின் தேவையற்ற வெறும் வாயை மெல்லும் குழப்ப பேச்சுக்களால் குழந்தைகள் மீது அழுத்தம் செலுத்தும் பெற்றோர் என மெய்நிகர் நாடகத்தை மேடையில் நிகழ்த்திக் காட்டினர். நாடகத்திற்கு பின் வெளிச்சம் மாணவர் அமைப்பின் நிறுவனர் திரு.செரின் அவர்கள் பேசத் தொடங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குறைவாக இருந்த மகளிர் திரள் செரின் அவர்களின் உரையாடல் நீள, நீள கூட்டம் கூடிக் கொண்டே போனது. 





செரீன் அவர்கள் பெற்றோர்கள்  சந்திக்கும் அத்தனை பிரச்சினைகளை கணக்கிலெடுத்து குழந்தைகளிடம் அவர்கள் அணுக வேண்டிய முறைகளை பற்றி விரிவாக பேசினார். குழந்தைகளிடம் அதை செய்யாதே, இதை செய்யாதே என்று கண்டிப்பு காட்டும் பெற்றோர்களில் எத்தனை பேர் தன் வாழ்க்கையில் குழந்தைகள் தம்மை பின்பற்றும்படி வாழ்ந்து காட்டுகின்றனர். நாள் முழுக்க தொலைக்காட்சி பெட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டு குழந்தைகளை தொலைக்காட்சி பக்கம் வராமல் இருக்கச் சொல்ல பெற்றோர்களுக்கு எப்படி தகுதி வரும்? நாம் தொடர்களில் மூழ்கி கிடந்தால், குழந்தைகள் சினிமா பாடல்களில் மூழ்கித்தான் கிடப்பார்கள். குழந்தைகளுக்கு பொது அறிவு வர செய்திகள், இயற்கை சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகளை, அறிவியல் செய்திகளை தாங்கி வரும் டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சிகளை பார்த்தால்தானே நாமும் சிலவற்றை தெரிந்து கொள்ள முடியும், குழந்தைகளின் அறிவு ஊற்றுக் கண்ணும் திறக்கும்.



கணவன் மனைவி பேசிக் கொள்ளும் போதோ, குழாயடியில் பெண்களோடு சண்டை போட்டுக் கொள்ளும் போதோ, நாம் கொச்சையான சொற்களை சரளமாக பயன்படுத்திவிட்டு, குழந்தைகள் அதுபோன்ற சொற்களை பயன்படுத்தக் கூடாது என்ற எதிர்ப்பார்ப்பு எந்தளவு சரியானதாக, நேர்மையானதாக இருக்கும்.

வீட்டோடு, இல்லறத்தை கவனித்துக் கொண்டு வீட்டிலிருக்கும் பெண்களானாலும் சரி, பணிக்கு செல்லும் பெண்களானாலும் சரி, ‘நான் இன்று அல்லது தினமும் என் குழந்தையோடு அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ ஒரு தோழியைப் போல, தோழனைப் போல பேசுவேன்என்று நினைத்திருப்பீர்கள், கண்டிப்பாக பெரும்பாலும் இருக்காது.  வீட்டில் தோழமை கிடைக்காத போது, வெளியே பதின் வயது உள்ளம் தேடத்தானே செய்யும், இதில் நம் வீட்டுக்குள்ளேயே வந்து ஆபாச குப்பைகளை வேறு தொலைக்காட்சிகள் கொட்டிச் செல்கின்றன. நாம் கவனமாக செயல்பட வேண்டாமா? தாய்மை என்றால் என்ன? தன் குழந்தைக்கு தேவையான உணவை சமைப்பதும், பரிமாறுவதும் மட்டும்தானா? தன் குழந்தைக்கு தேவையான உணர்வு ரீதியான ஆறுதல், அரவணைப்பு இரண்டையும் வழங்குவதுதானே…?

அதோடு, பெற்றோர்களாகிய நம் மக்கள் பெரும்பாலும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதைவிட உறவினர்கள், சுற்றத்தார்கள் என்ன நினைப்பார்கள்? என்ற சிந்தனையிலேயே தம் குழந்தையின் இயல்பை மாற்றுவதோடு மட்டுமில்லாமல், தமது இயல்பையும் இழந்து நின்கின்றனர்.. அடிக்கடி நமது சமூகத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள், ‘அந்த நாலு  பேரு என்ன நினைப்பாங்க’எந்த நாலு பேர்? எவன்/எவள் தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு இருக்கும் நேரம் போக ஓய்வு நேரத்தில் ஊரார் வீட்டை பற்றி வம்படிப்பதை பிழைப்பாய் வைத்திருக்கின்றனரோ, எவனுக்கு உங்கள் குழந்தைகள் படிப்பை நிறுத்துவதால் எந்த நட்டமும் இல்லையோ, எவனுக்கு உங்கள் குழந்தை மற்றொரு நபருடன் தேவையற்ற உறவை வளர்த்துக் கொள்வதில் துளியளவு வருத்தமே இல்லையோ, எவன் உங்கள் பிள்ளையின் கல்விக்கு 50 காசளவில் உதவ முடியாதோ? அவனிடம் நமது குழந்தைகள் நற்சான்றிதழ் பெற வேண்டுமென்று மெனக்கெடும் பெற்றோரை என்ன சொல்வது. இனியாவது இன்றைய பெற்றோர்களாகிய  என் சகோதர, சகோதரிகள் தத்தமது குழந்தையின் நலனை முதன்மையாக கொண்டு சிந்திக்குமாறு மிகத்தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குழந்தையின் மேற்கல்விக்கு உதவிட , குழந்தைகளின் உளவியல் சிக்கலை  தவிர்த்திட மாணவர்கள் உதவி  எண் 9698151515 என்ற எண்ணுக்கு நீங்களோ, குழந்தைகளோ தொடர்பு கொள்ளலாம். அதோடு, கேள்விகள்  ஏதுமிருப்பின் சகோதரிகள்  கேள்வி எழுப்பலாம்.” என்று செரீன் பேசி முடித்தார்.


இதன் பிறகு, தனது கருத்தை பதிவிட்ட பெண், பெண்களை மட்டுமே குற்றம் சுமத்திக் கொண்டிருக்காமல், கொஞ்சம் எங்கள் வலிகளையும் கேளுங்கள், கணவர்கள் யாரும் பெண்களை சக மனுசியாக பார்ப்பதில்லை, சம்பளமில்லா வேலைக்காரியாகவே பார்க்கின்றனர். கணவன் துணியை இடுப்பு வலிக்க துவைத்துக் கொடுத்தாலும், கொஞ்சம் கூட பரிவு காட்டுவது, துணிகளை உலர்த்துவதற்கு கூட உதவுவது கிடையாது, நாங்கள் தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கி கிடப்பதாக எம்மீது குற்றம் சுமத்தப்படுகிறது, எத்தனை கணவர்கள் எம்மை நம்பி வேலைக்கு அனுமதிக்க தயாராக இருக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைத்து வைத்தால், வீடே உலகமென்றிருக்கும் சூழலில் தொலைக்காட்சி பெட்டிதான் எங்களுக்கு பொழுது போக்கு கருவியாக இருக்கிறது. மாற்று உருவாக்கி தர இதே போன்று கணவர்களிடமும் பேசுங்கள்.

   நாமும் கண்டிப்பாக ஆண்களிடமும் பேசுவோம், பெண்களிடமும் பேசுவோம், குழந்தைகளிடமும் பேசுவோம் உரையாடல் வழி ஒரு  ஆரோக்கியமான சமூகத்தை உண்டாக்குவோம் என்று வாக்குறுதி அளித்து வந்தோம்.

          பொழுது போக்கிற்காக பலருக்கு  இணையதளங்கள் பயன்படலாம். ஆனால் வெளிச்சம் மாணவர்களின்  கல்விக்கு  உதவிடும் பலரை அறிமுகம் செய்வது இந்த இணையம் தான். அதன் வகையில்  இணையதளத்தில்  நம்  கல்விப்பணியினை தொடர்ந்து கவனித்து வந்த SJSRY    திட்டத்தின் மண்டல திட்ட அலுவலர்,  திரு.செல்வராசு அவர்கள், எங்களுடைய பணி இன்னும் பல கிராமபுற மாணவர்களுக்கு போக வேண்டும் என நம்மிடம் கேட்டுகொண்டார். அவரின் அலோசனைப்படி திருவண்ணாமலை,வேலூர். விழுப்புரம் மாவட்டங்களில் அந்தந்த பேரூராட்சிகள் மற்றும் வெளிச்சம் இணைந்து பள்ளிகள் மற்றும் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு நாம் தன்னம்பிக்கை வாழ்வியல் பயிற்சி கொடுக்க   நினைத்தோம்..
               அதன் முதல் முயற்சியாக 31.1.11 அன்று காலை 10 மணியளவில் வந்தவாசி - அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் இன்றைய மாணவர்களின் உளவியல் எதை நோக்கி? என்கிற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியினை வந்தவாசி  நகராட்சி சமூக கல்வி அலுவலர் திரு முனைவர். கணேசன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்..

     நிகழ்ச்சியில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர்கள்:
                      
                                   திரு.க.சீனிவாசன், நகர் மன்ற தலைவர், 
                                                          திருமதி. இரா.வாசுகி பாபு, நகர் மன்ற துணைத் தலைவர்,
                                                    திரு. N.உசேன் பாரூக் மன்னர், Bsc, B.L, M.B.A,   ஆணையாளர்,   நகராட்சி உறுப்பினர்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
திரு.செல்வராசு அவர்கள். மண்டல திட்ட அலுவலர்,

 நாம் விசயத்திற்கு வருவோம்!

நாடகம் 

  

கைகளை தூக்கும் மாணவிகள்

             வெளிச்சம் மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக துவங்கியது, வெளிச்சம் தீபா அவர்களின் பாடலை தொடர்ந்து, நமது குழுவின் சிறு நாடகத்தின் மூலம்  மாணவர்களுக்குள் எழும்பும் கேள்விகளை விளக்கும் வகையிலும், அவர்களின் எதிர்காலம் தீர்மானிப்பது கல்விதான் என்பதையும்  பெற்றோர்களை நேசிப்பது அவர்களின் கடமை எனவும் விளக்கிய போது மாணவர்களின் கண்களில் சிரிப்பின் வழியில் சிந்தனை தூண்டியதை நீங்கள் புகைப்படங்களை பார்க்கலாம்.. மேலும் இன்றைய மாணவர்களின் உளவியல் எதை நோக்கி....” என்ற தலைப்பிலான மாணவிகளுடனான  கலந்துரையாடலை  வெளிச்சம் அமைப்பின்  நிறுவனர் வெளிச்சம் செரீன் அவர்கள் பேசிய போது மாணவர்கள் சிரித்தனர்.  மேலும் எவ்வளவு பேர் அம்மா அப்பாவை பிடிக்காது திட்டீருக்கீங்கன்னு கேட்க சிலர் கைகளை உயர்த்தினர் ஆனால் பெண்ணாய் ஏண்டா பிறந்தோம்னு  எவ்வளவு பேர் கஸ்ட்டபடுறீங்கண்ணு மீண்டும் ஒரு கேள்வியை முன்வைக்க எதிர்பாரா வண்ணம் எல்லா மாணவிகளும் கைகளை உயர்த்தினர். அக்கா தினம் தினம் எல்லா இடத்திலயும் அவமானப்படுறோம் என செல்வி என்கிற மாணவி சொன்ன போது சின்னவயதில் அவர்கள் படும் அனுபங்களின் வலியை நம்மால் உணர முடிந்தது.
சந்தோசமாக


கடைசியாக பயிற்சி எந்த அளவுக்கு இருந்தது என  நாம் மாணவிகளிடம் கேட்க இந்த பயிற்சி  எங்கள் வாழ்க்கைக்கு உதவும்னு நம்புறேன். சினிமா காரங்களைதான் நான் பெருமையா நினைச்சிருந்தேன். இன்றிலிருந்து எனக்காக கஸ்ட்டபடுற எங்கப்ப்பா அம்மாவை தான்   நினைப்பேன்னு சொல்ல..  அவர்களின் கண்கள் கலங்கியதை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை..  அவரை வெளிச்சம் மாணவர்கள் குழு ஆறுதல் சொல்லி விடைபெற்றோம்... பள்ளி தலைமை ஆசிரியர் மீண்டும் எங்கள் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வரவேண்டும் என நம்மிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் நாம் ஏற்று கொண்டோம்  தினம் கிடக்கும் அனுபவங்களை இளைய தலைமுறைக்கு சொல்வதில் படித்து கொண்டிருக்கும் உங்களை போலவே வெளிச்சம் மாணவர்களுக்கும் ஆர்வம் அதிகம்..

இணையம் மூலம் கிடைத்த செல்வராசு அய்யா அவர்களுக்கும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த முனைவர்.கணேசன் அவர்களுக்கும் நன்றிகள்..