உதவுவதற்கு உறவுகள் தேவையில்லை...ஒரு மாணவியின் கல்விக்கான போராட்டம்:

Posted by Unknown - -

               உறவுகளே!  நம்மை நாடி வந்த புது உறவை குறித்துதான் இன்று உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க இருக்கிறோம். அந்த  உறவின் பெயர் சவிதா. சென்னை புரசைவாக்கம் பகுதியில் வசித்து வரும் இவர் தற்போது  இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்று வருகிறார். வறியவர் வாழ்க்கையில் சோகம் இலவசம் என்பது போல் இந்த பெண்ணின் வாழ்க்கையிலும் சோகம் பல வழிகளில் தொடர் கதையாய் நீண்டு வந்திருக்கிறது.

              வெளிச்சம் மாணவர்களிடம் கல்வி உதவி கேட்டு விண்ணப்பித்த நிலையில், வெளிச்சம் மாணவர்களின் ஆய்வில் மேற்கண்ட  மாணவியின் சூழல் கண்ணீரை வர வைத்தது என்றால், வாழ்ந்த அந்த மாணவியை சோகம் என்ன பாடு படுத்தியிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

சவீதா அவர்களிடம் ரூ 3500 கான காசோலை வழங்கும் வெளிச்சம் மாணவர் மாரி 

          
பெரிய அளவில் பொருளாதார சிக்கல் இல்லாத சூழலில் பிறந்த வளர்ந்த பெண் அவர்.  உடன்பிறந்தது ஒரே அண்ணன் மட்டுமே. அப்பா சென்னை FCI இல் கிளார்க்காக பணி புரிந்திருக்கிறார். அதனால் அடிப்படை கல்விக்கு நல்ல தகுதியுள்ள பள்ளியிலேயே வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  திடீரென்று வாழ்வின் சந்தோசத்தில் இடிவிழ வைத்தது சர்க்கரை நோய். ஆம்,  சவிதா  ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அவரின் அம்மாவிற்கு சர்க்கரை நோய் வந்திருக்கிறது. சர்க்கரை நோயின் தீவிரம் அதிகமாகவே, கால்களை எடுத்துவிட மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி, இரண்டு கால்களும் அகற்றப்பட்டன. அதன்பிறகு  மருத்துவமும் பெரிய அளவில் பலனளிக்கவில்லை. கடைசியில் சர்க்கரை நோய் சவிதாவின் தாயாரின் உயிரை குடித்தே விட்டது. தாயின் பிரிவு வாட்டி விடக்கூடாது என்பதற்காக, தன் குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் வாழ தொடங்கினார் அவரது தந்தை. தந்தையின் அரவணைப்பில் தாயின் பிரிவிலிருந்து மெல்ல மீண்டு வந்தனர் குழந்தைகள்.  நல்ல முறையில் படித்த சவிதா அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை சேர்ந்திருக்கிறார். குடும்பத்தில் துளிர்விட்டிருந்த மகிழ்ச்சியில் பேரிடியாய் மீண்டும் வந்திறங்கியது அந்த சோகச் செய்தி. அவரது தந்தையும் சர்க்கரை  நோயில் இறக்க,  ஏதும் செய்வதறியாது நின்றனர் இந்த பிள்ளைகள். சவிதாவுக்கு எஞ்சிய நம்பிக்கைக்குரிய ஒரே உறவு அண்ணன் மட்டும்தான். மிகுந்த பொருளாதார சிக்கலில் அண்ணனும் தங்கையும் தத்தமது கல்வியை தொடர்ந்தனர். கல்வியை  நடுவிலேயே நிறுத்தும்  நிலைக்கு ஆளாயினர். உறவினர்களின் ஆதரவுமில்லாமல், பெற்றோரையிழந்த பிள்ளைகளுக்கு மனிதநேயமுள்ள  பேராசிரியர் ஒருவரின் ஆதரவில்  துவண்டு விழாமல் கல்லூரிக்கு சென்றார் சவிதா.  


கல்வியை தேட உள்ளத்தில் ஊக்கமிருந்தாலும், கையில் பணமில்லையென்றால், வயிற்றுக்கு சோறில்லையென்றால்.... அனுதினமும் அவஸ்தைதானே..”  சவிதா மட்டும் என்ன விதிவிலக்கா என்ன ? போதுமான உணவு எடுக்காமல் கல்லூரிக்கு போக்கும் வழியில் பேருந்தில் இருந்து மயங்கி விழுந்து, தலையின் பின்புறம் அடிப்பட்டு ஏழு தையல் போட்டு சுயநினைவு இழக்கும் நிலைவரைச் செல்கிறாள். அதனால் இரண்டு செமஸ்ட்டர் தேர்வுஎழுத முடியாமல் தவித்திருக்கிறார். ஆனாலும், நண்பர்களின் உதவியால் மருத்துவம் பெற்று, உடல்நிலைச் சீரானதும் மீண்டும் கல்லூரிக்கு செல்ல தொடங்கி, கல்லூரிக்கு  கட்டணம் கட்ட பிரச்சினை வந்த பொழுது நண்பர்களும்,  அந்த பேராசிரியரும் சிறுக, சிறுக  சேகரித்து உதவினர். இரண்டாண்டுக்கான கட்டணத்தை அந்த  மேலான உதவியைக் கொண்டு கட்டிவிட்டதாக கூறும் சவிதா...இதை கூறும் பொழுதில், முகத்தில் அறைவது போல் ஒன்று சொல்லி வருத்தப்பட்டார். என்ன தெரியுமா? அது.


“துன்பம் என்று வரும் பொழுது, உதவ  இரத்த உறவுகளாய் இருக்கின்ற காரணத்தினால் மட்டும் யாரும் உதவி விடுவதில்லை, உதவும் உள்ளம் எதுவோ, அதுதான் நம் உறவு, நானும் இந்தச் சமூகத்தில் என்னால் இயன்றவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வேன், நான் பட்ட வலிகள் யாருக்கும் வரக்கூடாது... பணம் கட்டமுடியாமல், பெற்றோரை இழந்தேன், சுய நினைவை இழந்தேன்,  நான் உயிர் வாழுவதே அதிசயம்  என்றார் கண்ணீருடன்”

                 நம்மை தொடர்பு கொண்ட விதத்தை பற்றி பதியவே இல்லையே... வழக்கம் போலத்தான் Students Help Line 9698151515 மூலம் தொடர்பு கொண்டார். தன்னுடைய நிலையை விளக்கி தனது கல்விக்கு உதவும் படி விண்ணப்பித்தார், நீண்ட நாள் ஆய்வுக்கு பிறகு  வெளிச்சம் மாணவர்கள்  அவருக்கான கல்வி உதவியை செய்திருக்கிறது. அவரும் வெளிச்சத்தின் பணிகளை இணையம், மற்றும் நிழற்படங்களின் வழி கண்டவர், ஆதரவற்ற தமக்கு வெளிச்சம் வாழ்க்கையில் வெளிச்சமிட்டிருப்பதாகவும், அருமையான உறவுகளை எல்லாம் இழந்தவள், உறவுகளின் அருமையை உணர்ந்தவள் என்கிற முறையில் வெளிச்சத்தின் கல்வி பணியில் தானும் இணைந்து கொள்வதாக கூறிச் சென்றார்.. நாமும்  உண்மையான உறவுக்கு உதவியதில் கிடைத்த மகிழ்ச்சியில் இந்த பதிவை தங்கள் முன் சம்ர்ப்பிக்கிறோம்.

“உதவிக்கு யாருமற்ற” நிலையில் சவீதாவுக்கு உதவிய பேராசிரியர் அவர்களையும், அவரது நண்பர்களையும் சவீதாவின் கல்லூரிக்கட்டணம் ரூபாய் 3500 வழங்கிய நல்லது செய்ய  பெயர் போட வேண்டாம் என சொல்லி உதவிய மனித நேயமுள்ளவரையும் வெளிச்சம் மாணவர்கள் வணங்குகிறோம்.






ஏழைகளின் உயர் கல்விக்கு உதவிட 
வெளிச்சம் மாணவர்களின் வங்கி கணக்கு விபரம்: 

ACCOUNT NAME:               " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST "
ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,
IFSC Code:                          SBIN 0002256
SWIFT Code:                       SBININBB458


One Response so far.

  1. “துன்பம் என்று வரும் பொழுது, உதவ இரத்த உறவுகளாய் இருக்கின்ற காரணத்தினால் மட்டும் யாரும் உதவி விடுவதில்லை, உதவும் உள்ளம் எதுவோ, அதுதான் நம் உறவு,//

    நிதர்சனம்..


    வாழ்த்துக்கள் உதவிய நல்லுள்ளங்களுக்கு..

Leave a Reply