நான்காம் வகுப்பு சிறுமியை... பத்தாம் வகுப்பு மாணவன்! சொல்லவும் கூசும் கொடூரம்

Posted by Unknown - -



வா
ழ்வை மேம்படுத்த உதவும் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆக்கபூர்வமாக அன்றி அழிவுப்பாதைக்குப் பயன் படுத்தி​னால் என்னவாகும் என்பதற்கு மறுபடி ஓர் உதாரணம். இந்தமுறை பரிதாப இலக்கு ஒரு மாணவி! 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது தென்னம்பட்டி கிராமம். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறாள் ஒன்பது வயதான பார்வதி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). அதே ஊரில் உள்ள மற்றொரு அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறான் ரவி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). .  கடந்த 21-ம் தேதி, பார்வதியை பலாத்காரம் செய்ததாக ரவி கைது செய்யப்பட... அதிர்ந்து நிற்கிறது திண்டுக்கல் வட்டாரம்!

மருத்துவப் பரிசோதனைக்காக வடமதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மலங்க, மலங்க விழித்தபடி காத்திருந்த சிறுமி பார்வதியிடம் பேசினோம்.

''அண்ணே... நான் நாலாப்பு படிக்கிறேன். அன்னிக்கி ஆய் உக்கார்றதுக்காக அந்தப் பக்கமா போனேன். அப்ப அந்த அண்ணா வந்துச்சு. ' உன்னை கூப்புட்டு வரச்சொன்னாங்க’ன்னு கூப்புட்டுச்சு. நான் வர மாட்டேன்னுட்டேன். உடனே, என்னை அடிச்சு இழுத்துட்டுப் போச்சு. நான் அழுதுகிட்டே சத்தம் போட்டேன்.. உடனே அந்த அண்ணன் கர்ச்சீப்பை எடுத்து என் வாயில் வெச்சு அமுக்கிடுச்சு. 'நான் சொல்றபடி கேக்கலைன்னா கொன்னுடுவேன்'னு கழுத்தைப் பிடிச்சு அமுக்கிச்சு. அப்புறம் என் துணிகளை...'' (அதற்கு மேல் சொல்வதற்கு அந்தக் குழந்தைக்கும் தெளிவில்லை... கேட்க நமக்கும் தெம்பில்லை) என்றபடி அழத் தொடங்கினாள் பார்வதி.
அந்தச் சிறுமியே  தொடர்ந்தாள்.

''கர்ச்சீப் கீழே விழுந்ததும் நான் கத்துனதைக் கேட்டு விறகு வெட்ட வந்தவங்க ஓடி வந்தாங்க. உடனேஅந்த அண்ணா டவுசரை தலையில மாட்டிக்கிட்டு ஓடிடுச்சு. நான் வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொன்னேன்'' என்றபடியே நினைவுகள் தந்த நடுக்கத்தோடு தன் தாயாரை அணைத்துக் கொண்டாள்.
சிறுமியின் தாய் ஈஸ்வரி, ''நாங்க அன்னாடு கூலிக்குப் போனாதாங்க கஞ்சி. எங்களுக்கு ரெண்டு பொட்டப் புள்ளைங்க. இவதான் மூத்தவ. டவுனுபள்ளிக்கூடத்துல படிக்க வெக்க வசதியில்லாம உள்ளூர்ல படிக்க வெச்சோம். நாலாப்பு படிக்கிற பிள்ளையை இப்படி செஞ்சிப் புட்டானே... இவ தலையெழுத்து... எந்த தப்பும் பண்ணாம இந்த வயசுலயே போலீஸ், கோர்ட்னு அலைஞ்சு இன்னும் அவமானப்பட வேண்டியதாப் போச்சு'' என்றபடி தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.

இந்த வழக்கு தொடர்பாக நம்மிடம் பேசிய வடமதுரை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கீதா, ''இந்த பிரச்னைக்குக் காரணமான அந்தப் பையன் இப்ப சீர்திருத்தப் பள்ளிக்குப் போயிட்டான். இதுக்கெல்லாம் காரணமே செல்போன்தான். அந்த ஊர்ல இருக்குற சில பசங்களோட செல்போன்ல ஆபாசப் படங்களை பார்ப்பானாம். அன்னிக்கும் அப்படி ஒரு படத்தைப் பாத்துட்டு இருந்தப்பதான், இந்தப் பிள்ளையைப் பார்த்திருக்கான். உணர்ச்சி வேகத்தில் இப்படிக் கேவலமா நடந்துக்கிட்டான். விசாரணை செய்றப்ப இதைத்தான் சொல்லிச் சொல்லி அழறான். 'இனிமே அசிங்கமான படத்தைப் பாக்க மாட்டேன். இப்படி நடந்துக்க மாட்டேன்'னு கதறி குமிச்சான். அவனைப் பெத்தவங்களும் தப்பு செஞ்சவன் தண்டனையை அனுபவிக்கட்டும்னு கோபத்தில் போயிட்டாங்க. எத்தனை பேருக்கு எவ்வளவு அவமானம், வேதனை பாருங்க'' என்றார்.

அறியாத வயதிலேயே இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடத் தூண்டுவது குறித்து மனநல மருத்துவர் அன்னராஜிடம் கேட்டோம். ''இன்டர்நெட்டில்  கொட்டிக்கிடக்கும் குப்பைகள்தான் முக்கியக் காரணம். அவற்றையும் மொபைல் போன்கள் மூலம் பரிமாறிக் கொள்ளும் அசிங்கங்களையும் பார்க்கும்போது, வயது வித்தியாசம் இல்லாமல் வக்கிர எண்ணங்கள் தூண்டப்படுவது இயற்கைதான்.  
வயதில், வலிமையில் குறைந்த பெண்ணாக இருப்பதால் வெளியே சொல்ல மாட்டாள் என்ற தைரியத்தில் இந்தத் தவறை செய்து இருக்கிறான் அந்தப் பையன். அந்தப் பெண் குழந்தைக்கு உடனடியாக உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்கா விட்டால் வாழ்க்கை முழுவதும் கூட இந்தப் பாதிப்பு மனதைவிட்டு அகலாது.

அந்தப் பையனுக்கும் உளவியல் சிகிச்சை அவசியம். இல்லா விட்டால் எதிர்காலத்தில் குற்ற உணர்வும், சீர்திருத்தப் பள்ளியின் சூழலும் அவனை மிகப்பெரிய குற்றவாளியாக மாற்றிவிடும் வாய்ப்பு உண்டு. பொதுவாகவே செல்போன், இன்டர்நெட் போன்றவற்றைப் பயன்படுத்தும் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் இருந்தாக வேண்டும். பள்ளிகளிலும் உளவியல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்பு உணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால், கட்டவிழ்ந்து கிடக்கும் அறிவியல் வளர்ச்சியால் இளம் சமுதாயத்துக்கு கெடுதலே அதிகம் மிஞ்சும்'' என்றார்.
வரங்களே சாபங்களாக மாறாதிருக்க, கூடுதல் கவனம் தேவைதானே!

- ஆர்.குமரேசன்
படங்கள்: வி.சிவக்குமார்


நன்றி: ஜூனியர் விகடன். 29 ஜூலை 2012

Leave a Reply