சமத்துவபுரத்தில் ஜாதியை காரணம் காட்டி நரிக்குறவர் குழந்தைகளின் பள்ளியை அபகரித்ததால், 35 குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பெரியார் நினைவு சமத்துவபுரம் அருகே 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் உள்ளன. இவர்களது நாடோடி வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, 2006 ஜூனில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உண்டு உறைவிட பள்ளி பன்ணைவயல் கிராமத்தில் தொடங்கப்பட்டது. 35 நரிக்குறவர் குழந்தைகள் இங்கு படித்து வந்தனர். இடநெருக்கடி காரணமாக 2010 நவ.,3ல் சமத்துவபுரத்திற்கு பள்ளி மாற்றப்பட்டது. இது அங்கு வசித்த பிற பிரிவு மக்களுக்கு பிடிக்கவில்லை. திடீரென அங்கிருந்த ரேஷன் கடையை பள்ளி கட்டத்திற்கு மாற்றினர். இது குறித்து நரிக்குறவர் மக்கள் திருவாடானை தாசில்தாரிடம் புகார் தெரிவித்து, அதன் அடிப்படையில் கட்டடத்தை இரண்டாக பிரித்து ஒரு பகுதியில் ரேஷன் கடை, மறுபகுதியில் பள்ளி இயங்கியது. அதற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக அங்கன்வாடி மையத்தை நரிக்குறவர் குழந்தைகளின் பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர்.பள்ளி அபகரிக்கப்பட்ட நிலையில், 35 குழந்தைகளும் வீட்டில் முடங்கி உள்ளனர். இது குறித்து திருவாடானை தாசில்தார் சுகுமாறனிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் கொதித்து போன நரிக்குறவர்கள் ராமநாதபுரம் வந்து, கலெக்டர் ஹரிஹரனை அவரது வீட்டில் சந்தித்து முறையிட்டனர். மல்லிகா கூறியதாவது: எங்கள் குழந்தைகள் கல்வி கற்க கூடாது என்பதற்காக திட்டமிட்டு சதி செய்து வருகின்றனர். சமத்துவபுரத்தில் ஜாதி பார்ப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை, என்றார். கலெக்டர் ஹரிஹரனிடம் கேட்டபோது,"" குழந்தைகளுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஓய்வு பெற்றுவிட்டார். அவரை திரும்பவும் நியமிக்கும் கோரிக்கையின் அடிப்படையில் இப்பிரச்னை எழுவதாக தெரிகிறது. பிரச்னை சுமூகமாக தீர்க்கப்படும்,'' என்றார்.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment